அகரத்தில் பிறப்பெடுக்க உந்தன் உதிரத்தில் பால்தந்து
உதரத்தில் உதைத்தாலும் எம் உயிர் சுமந்து
நீதந்த வாழ்வு இது உனக்காக வரும் அன்பு...
காலத்தில் மாறிவரும் கனவான தேசத்தில்
என்றென்றும் மாறாத உன் பாசம் தானடி...
தன் மகவு பிழை செயாதென தாயன்பு பரிதவிக்கும்
தான் பட்ட துன்பமெல்லாம் துசாக நினைந்திடும்...
உள்ளன்பு உரிமையோடு உன்னதமாய் பேணிவிடும்
உலகமெல்லாம் ஓடி ஓடி உன் நிழலைக் காத்திடும்...
தள்ளாத வயதிலும் தாய்க்குத் தன் பிள்ளை
தாலாட்டுப் பாடலிலும் தாய்க்கு ஒப்பில்லை...
நீ விழுந்தால் - வலிக்கிறது அவளுக்கு
நீ எழுந்தால் - இனிக்கிறது அவளுக்கு...
நீ நடந்தால் - நிழலாய் அவள் அசைவு
நீ வாழ்ந்தால் - நிம்மதி அவள் கனவு...
இவ்வுலக வாழ்வுதனில் உனக்கேதும் நிகரில்லை
இனி ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும்
நீதான் வேண்டும் என் அம்மாவாய்....!
No comments:
Post a Comment