கோவில் இல்லா ஊர்களிலே குடியிருக்க
பேயும் அஞ்சும்....
ஆலயம் இல்லா இடத்தில்
ஆளரவம் இருக்காது...!
நான்கு பக்கமும் மதில்கள் சூழ
ராஜகோபுரம் நிமிர்ந்து நிற்க...
ஒருபக்கம் தேர்முட்டி
மறுபக்கம் அன்னதான மண்டபம்...
கும்பழாவளையின் சிறப்புக்கள் ஆயிரம்...
தொண்டர்சபை நடத்தும் 'பண்ணிசை வகுப்பு'
நெஞ்சில் நிழலாடும்...
அளவெட்டியில் சங்கீதமென்றால்
அவர் பெயர்தான் முதலில் வரும்...
'வி.கே நடராசா' ஊரே அறிந்த பெயர்...
அவர் நடத்தும் பண்ணிசையில் தேவாரம்
தேனாய் ஒலிக்கும்...
திருவாசகம் கேட்டால் திகட்டாத மருந்தாகும்...
முன்னைய ஆலயத்தின் உட்சுவரில்
ஓவியங்கள்...
பளிங்குக்கல்லில் பக்குவமாய் வரைந்த
காவியங்கள்...
அழகுக் கோலமிட்ட கரங்கள் அவருடையது
'ஆர்ட் மாஸ்டர் பொன்னம்பலம்'
ஆலயத் திருப்பணியில் அலாதியான இன்பம்...
அளவெட்டிக் கோவில்களில் அவர் கைவண்ணம் மின்னும்...
இன்றைய பொழுதுகளில் ஆலயச் சுவர்களில்
அந்த ஓவியங்கள் இல்லை...
எங்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றன...
எங்கள் ஆலய மணியின் நாதம்
அற்புதமான ஒன்று...
அளவெட்டி முழுவதுமே அழகாகக் கேட்கும் இசை...
போர்க் காலங்களிலும்
நித்திய பூசைகள் இடைவிடாது நிகழ்ந்தது
கும்பழாவளையில் பெருமை...
கடல் கடந்து போனாலும் அவர் அருள்
நடை தளர்ந்து போனாலும் அவர் துணை...!
பாதை தொடரும்...





No comments:
Post a Comment